January 11, 2014

வீரர்களை இழந்தோம் !! வீரத்தை அல்ல



***...***
----------------------------------------------------------------------

முன்னம் பறிகொடுத்தோம்
முள்ளிவாயில் பரிதவித்தோம்
திண்ணம் தீ சூழ
திசை எங்கும்
உயிர் கொடுத்தோம்

எண்ணம் ஈடேறும்
எதிர்காலம் சூடேறும்
வண்ணம் தமிழ் ஆட்சி
வலியோடு பீடேறும் .

சிங்கள பாவிகள்
சிதையும் நாள் தூரமில்லை

நான்கு திசையெங்கும்
ஆர்ப்பரிக்கும் கடல் நீரும்
நாளும் சூடேறும் -அழும்
எங்கள் கண்ணீரும் - ஒருநாள்
பொங்கி வரும்
பொதுவுடைமை சொல்லி தரும்
பொங்குவது தமிழனா ? கடலா ?
காலம்தான் தீர்ப்பு தரும்

கருமேகம் மறைப்பதினால்
கதிரவன் அழிவதில்லை
காற்று மோதிவிட்டால்
கருமேகம் பிழைப்பதில்லை

எங்கள் பக்கம் எதிர்கால
காற்றடிக்கும்
எங்கள் இனத்தை தர்மமே
மீட்டெக்கும்

ஆயிரம் ராஜபக்சே
அரியணை ஏறினாலும்
ஆயிரம் ஆண்டுகள்
அடக்குமுறையில் ஊறினாலும்

தன்னை காத்து கொள்ள
தமிழுக்கு தெரியுமடா - அன்று
தமிழன் யார் என்று
தரணிக்கு புரியுமடா

அந்நியனின் கால் நக்கி
ஆயுதங்களை மேல் தூக்கி
என்னினத்தை அழித்தவர்களே
எதிர்காலம் பதில் சொல்லும் .

இன்னும் ஆயிரம்
அண்ணனை பெற்றடுக்க
அன்னை தமிழுக்கு
கருவிலே இடமுண்டு - ஆனால்
இந்த ஒருவரை சமாளிக்கவே
உலகமே உங்களுக்கு உதவியது .

எச்சை பதவி பெற்று
எட்டப்பன் தொழிலை கற்று
பிச்சை பணத்திற்காக
பெற்றவளை தெருவில் விற்ற

பச்சை துரோகிகளே
பாவத்தின் மூட்டைகளே
இனத்தின் அழிவுகளே
வரலாற்று கழிவுகளே

ஆண்டுகள் பல ஆனாலும்
ஆயிரம் உயிர் போனாலும்
ஈழம் அடைவோமடா
எதிர்காலம் விடியுமடா .

நாளை வெல்லும்போது
நானும் நீயும் இருக்க மாட்டோம் - ஆனால்
எதிர்கால தமிழினம்
வெற்றி முரசு கொட்டும் - அன்று
நிகழ்கால ஒரே சாட்சி
சூரியன் கை தட்டும் ......

தமிழர்களே ..

எதற்காகவும் அழாதீர்
எவரிடமும் தொழாதீர்

நம்பிக்கை வீரத்தை
இரு விழியில் பொறித்திருப்போம்
தர்மம் காக்க வரும்
அது வரை பொறுத்திருப்போம் .

- வை . நடராஜன்

No comments:

Post a Comment