September 24, 2012

உதிரும் வரை உடனிருப்பேன்




கவலையிலே அழுவும் போது
கண் துடைக்க நான் இல்லை _ ஆயின்
நீ காலம் முழுதும் சிரிப்பதற்கு
கண் போல நானிருப்பேன்

உன் இளமை ருசிப்பதற்கு
ஆசையிலே நானிருந்தேன்
நீ முதுமை கண்டபோதும்
அன்னையாக நான் சுமப்பேன்

பிறை கொண்ட நிலவாக
இருக்கின்ற என் இனியா _ நீ
நரை கண்ட காலம் கூட
உன்னழகை நான் ரசிப்பேன்

நடமாடும் சிற்பமே
நானிருக்கேன் கலங்காதே
தள்ளாடும் பருவம் வரை
துணையிருப்பேன் மறவாதே

காலமும் நீ சிரிக்க
நானிருப்பேன் _ கண்கள்
கலங்கிய நேரமெல்லாம்
துணையிருப்பேன்


வாழும் வரை என் நெஞ்சில்
உன்னை சுமப்பேன் _ நீ
மரணம் கண்டு போகும் போது
மடி சுமப்பேன்

நாள் சுருங்கும் இவ்வாழ்க்கை
ஓடி விடும் _ நாளை
தோல் சுருங்கும் காலம்
நம்மை தேடி வரும்

முதிர்ந்தாலும் என் குழந்தை
நீ தானே .. நாட்கள் முடியும்
வரை உன் உலகம்
நான் தானே..

மெய் கோர்த்த நம் நேசம்
மெய் அன்பில் வாழ வேண்டும்
கை கோர்த்த படியாக
ஒன்றாக போக வேண்டும்


நான் கண்ட தேன் மலரே
நான் இருக்கேன் கலங்காதே
ஊன் விட்டு போடும் வரை
உன்னை சுமப்பேன் வருந்தாதே

No comments:

Post a Comment