September 22, 2012

நிலை கொஞ்சம் தாழ்ந்தால்




நிமிர்ந்து பார்த்து மதித்தவரோ
குனிந்து பார்த்து பகைத்தார்
நாம் நிலையில் கொஞ்சம்
இறங்கி விட்டால்
ஏளனம் செய்து நகைப்பார்

பாச வார்த்தை ஆயிரம்தான்
பணத்தை கண்டால் சுரக்கும் _ நாம்
பணமும் பதவி இழந்து விட்டால்
பறவை போல பறக்கும்

கொடுக்கும் நிலையில்
இருக்கும் போது
கோயில் போல துதிப்பார் _ நீ
வாங்கும் நிலைக்கு
வந்து விட்டால்
வாசற்படியாய் மிதிப்பார்

இருக்கும் வரை இறக்கை
போல ஒட்டி கொண்டு பறப்பார் _ நாம்
இழந்து விட்டு தவிக்கும் போது
கோடி தூரம் இருப்பார்

காதல் பாசம் நட்பு என
சுத்தி சுத்தி திரிவார்
கையில் காசு இல்லை எனில்
சத்தமின்றி மறைவார்

இருக்கும் வரை சுற்றி பார்த்தால்
சுத்தி சுத்தி உறவு _ அனைத்தும்
இழந்து திரும்பி பார்த்தால்
ஞானம் ஒன்றே வரவு

கோயில் குளத்தில் பொழிந்த
மழை கழிவு நீரிலும் பொழியும்
அது விழுந்த இடத்தை பொருத்துதானே
உலகம் அதனை மதிக்கும்

நல்ல உள்ளம் இருந்தாலும்
கடுகை போல இருப்பாய் _ நீ
நாலு காசு இருந்தால் தான்
கடலை போல தெரிவாய்

No comments:

Post a Comment